Sunday, March 31, 2013

காம்ரேடுக்கே காப்பிரைட்டா?


சேகுவேரா - உலகெங்கும் உள்ள இடதுசாரிகள், போராளிகள், புரட்சிக்காரர்கள், ஏகாதிபத்திய-காலனியாதிக்க எதிர்ப்பாளர்கள் மற்றும் முற்போக்காளர்களுக்கு ஆதர்ச நாயகன். சே எழுதிய நூல்கள், சே குறித்த நூல்கள் என்று ஏராளமான நூல்கள் உள்ளன. சே உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகள், பிற உடைகள் எல்லாம் ஒருகாலத்தில் புரட்சியை விரும்புபவர்கள் மட்டுமே அணிந்துகொண்டிருந்தனர். ஆனால் சேகுவேராவை வியாபாரத்துக்கு பயன்படுத்தத் தொடங்கி அவருடைய உருவம் ஒரு வணிகப் பொருளாகி நெடுநாட்களாகின்றன. இந்த வணிகம் எல்லா துறைகளுக்கும் விஸ்தரிக்கப்படத் தொடங்கியுள்ளது.




அண்மையில் ஒரு நாளிதழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட விளம்பரம் ஒன்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ’சேகுவேராவின் நூல்களை கண்ணதாசன் பதிப்பகம் தவிர, வேறு எவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுவோர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படியும், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படியும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரப்பட்டு மற்றும் இதர சட்டங்களின் கீழ் இழப்பீடுகளும் பெறப்படும்’ என்கிறது அவ்விளம்பரம். ‘மோட்டார்சைக்கிள் டயரி, சேகுவேரா - ஓர் நினைவு - பிடல் காஸ்ட்ரோ, பொலிவியன் நாட்குறிப்பு ஆகிய மூன்று நூல்களுக்கும் முறையாக காப்புரிமை பெற்றிருப்பதாக அறிவிக்கிறது விளம்பரம். ’மேலும் பல நூல்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சேகுவேராவின் அனைத்து புகைப்படங்கள், தொலைக்காட்சி தொடராக்கும் உரிமையும் கண்ணதாசன் பதிப்பகம் காப்புரிமை பெற்றுள்ளது’ என்கிறது விளம்பரம். 

சேகுவேராவின் படங்கள் இல்லாத இடதுசாரிகளின் மாநாடோ கூட்டங்களையோ காண்பது அரிது. இந்தியாவின் முக்கிய இடதுசாரிக்கட்சிகளுள் ஒன்றான சி.பி.ஐ(எம்) கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளரும் பாரதி புத்தகாலயத்தின் நிறுவனருமான ஜி.ராமகிருஷ்ணன் ‘’காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் எங்கல்ஸ், மாவோ, ஹோ-சி-மின், சேகுவேரா போன்ற தலைவர்கள் எல்லோருமே மக்கள் தலைவர்கள். சர்வதேச உழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்கள் இவர்கள். அவர்களுடைய நூல்கள் மக்களுக்கானவை. மக்கள் தலைவர் ஒருவரை நான் விலைக்கு வாங்கிவிட்டேன் என்று கண்ணதாசன் பதிப்பகம் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. முற்றிலும் வணிக நோக்கமே இதில் உள்ளது. சேகுவேராவின் எழுத்துக்கள் விலைமதிப்பற்றவை. அவற்றை நான் இத்தனை டாலர் கொடுத்து வாங்கிவிட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.

எழுத்தாளர்கள், இடதுசாரிகள், அறிவுஜீவிகள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருமே இந்த அறிவிப்பைக்கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே சுமார் 200க்கும் மேற்பட்ட சே தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு பதிப்பகங்கள் இவற்றை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலையில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட விளம்பரத்தில் 3 நூல்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. மற்ற நூல்களின் பெயர்கள் இல்லை. சேகுவேராவை 40க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் படம் எடுத்துள்ளனர். அத்தனை புகைப்படங்களுக்கும் எப்படி ஒருவர் உரிமை பெற்றிருக்கமுடியும் என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசனை இந்தியா டுடே அணுகியது.

’’சேகுவேராவின் மகளான அலெய்டா குவேரா ஆஸ்திரேலியாவில் உள்ள ஓஷன் பிரஸ் நிறுவனத்திடம் சே-வின் அனைத்து நூல்களுக்குமான உரிமையை அளித்துள்ளார். நாங்கள் 2009ல் இருந்து முயற்சி செய்து அவர்களிடமிருந்து காப்புரிமையைப் பெற்றுள்ளோம். தமிழில் இயங்கும் பதிப்பகங்கள் பலவற்றுக்கு காப்புரிமை குறித்த விழிப்புணர்வு இல்லை. எந்த மொழியில் இருந்து எந்த நூலை தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்றாலும், முறையாக காப்புரிமை பெற்றுத்தான் கொண்டுவரவேண்டும். மற்றவர்கள் இதைச் செய்யவில்லை. நான் முறையாக காப்புரிமை பெற்றுச் செய்கிறேன். இதற்கு எதற்கு அதிர்ச்சி அடையவேண்டும்? இவர்கள் இதற்கு முன்னர் வெளியிட்ட புத்தகங்களுக்கு காப்புரிமை வாங்காமல் இருந்ததே தவறுதான். முறையாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்று எண்ணியதால்தான் நாங்கள் காப்புரிமை பெற்றோம். இப்போது 3 நூல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளோம். மேலும் சில நூல்களுக்கும் காப்புரிமை பெறும் முயற்சியில் இருக்கிறோம். நாங்கள் காப்புரிமை பெற்ற நூல்கள் தொடர்பான புகைப்படங்களுக்கு எங்களுக்கு காப்புரிமை உண்டு. நாங்கள் பெற்றது போல வேறு நூல்களுக்கு யார் வேண்டுமானாலும் காப்புரிமை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

சி.பி.ஐ.கட்சியின் மூத்த தலைவரும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பதிப்பாளருமான ஆர்.நல்லக்கண்ணு ‘’இந்த விளம்பரம் அதிர்ச்சியை அளிக்கிறது. இது மிகவும் தவறு. மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சட்டரீதியான விஷயங்கள் குறித்தும் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்’’ என்றார். சி.பி.ஐ.(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எஃப்.ஐ.) மாநிலச் செயலாளரான வேல்முருகன் ‘’சே-வின் படங்களையோ நூல்களையோ இடதுசாரிகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் வியாபார நோக்கத்தில் இப்படியான ஒரு விளம்பரத்தை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருப்பதை நாங்கள் நிராகரிக்கிறோம்’’ என்றார்.

கண்ணதாசன் பதிப்பகம் மூன்று நூல்களுக்கு மட்டுமே காப்புரிமை வாங்கியுள்ள நிலையில், விளம்பரத்தில் காணப்படும் வாசகங்கள் தவறானவையாக இருப்பதாகவும், மூன்றே மூன்று நூல்களுக்கு காப்புரிமை வாங்கிவிட்டு, மேலும் பல நூல்களுக்கு வாங்கும் முயற்சி இன்னும் கைகூடாதபோது ‘’சேகுவேராவின் நூல்களை கண்ணதாசன் பதிப்பகம் தவிர, வேறு எவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது’’ என்று பொத்தாம்பொதுவாக விளம்பரம் செய்வதையே பலரும் விமர்சிக்கிறார்கள். அத்துடன் அந்த குறிப்பிட்ட மூன்று நூல்களுடன் தொடர்புடைய படங்களுக்கு மட்டும் காப்புரிமை உள்ளபோது, சேகுவேராவின் அனைத்து புகைப்படங்களுக்கும் காப்புரிமை பெற்றுள்ளதாக விளம்பர வாசகங்கள் கூறுகின்றன. சிறு பதிப்பகங்கள் பல கொள்கைரீதியாக உடன்பட்டு சேகுவேராவின் நூல்களை வெளிக்கொணரும் தங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை இது உருவாக்கும் என்று சிறுபதிப்பகத்தார் கூறுகிறார்கள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் தற்போது ஓஷன் பிரஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர். ஓர் இடதுசாரி புரட்சிக்காரரான சேகுவேராவின் நூல்களின் உரிமையை கொள்கைகளுக்கு மாறாக வலதுசாரி கண்ணதாசன் பதிப்பகம் பெற்றிருக்கிறது என்றும் அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டும் ஓஷன் பிரஸுக்கு கடிதங்களும் கண்டனங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. 

பெரியார் குடியரசு இதழில் எழுதியவற்றைத் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியாரின் எழுத்துக்களுக்கு தங்களிடம் காப்புரிமை உள்ளதால் தொகுப்பை வெளியிட தடைவிதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு இப்படி தீர்ப்பு கூறினார். ‘’சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பெரியார். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார். தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது. எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.’’ என்று கூறி கி.வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தார் நீதிபதி.
சட்டங்கள் என்னவாக இருந்தாலும் நீதிமன்றம் தெரிவித்த இந்தக் கருத்துகள் அப்படியே சேகுவாராவுக்கும் பொருந்தும் என்று இடதுசாரி அறிவுஜீவிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எவர் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளும் வகையில் சேகுவேராவின் நூல்களை மக்களின் பொதுச் சொத்தாக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.அவர்களின் முயற்சி பலிக்குமா? அல்லது காப்புரிமை பெற்றவருக்கே சே சொந்தம் என்றாகுமா?

1 comment:

  1. கண்ணச்தாசன் பதிப்பகம் நிலைப்பாட்ட மாத்திக்கிச்சா? ஏதாவது தகவல் உண்டா?

    ReplyDelete